திறைசேரி கணினி அமைப்பில் இடம்பெற்றதாக கூறப்படும் ஹேக்கிங் (கணினி ஊடுருவல்) சம்பவத்தில், சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயமானதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணத்தின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயார் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி, அந்த நிறுவனத்திற்கே பலமுறை பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நான்கு தனித்தனியான வங்கி கணக்குகள் அந்த நிறுவனத்துக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதில் ஒரு கணக்கில் மட்டுமே சுமார் 200 அமெரிக்க டொலர் அளவில் குறைந்த தொகை இருப்பதாகவும், மற்ற கணக்குகளில் இருந்த பணம் முழுமையாக எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த பண பரிமாற்றங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அல்லாமல் பல கட்டங்களாக நடந்துள்ளன. 2025 நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் பல முறை பணம் அனுப்பப்பட்டதாகவும், சில பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த போதிலும் அவை உறுதிப்படுத்தப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை அதிகாரிகள் கூறுவதாவது, இந்த ஹேக்கிங் செயலில் நேரடியாக ஒரே நபர் அல்லாமல் மூன்றாம் நபர் ஒருவரும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் “பிஸ் சொலூசன்” என்ற பெயரில் உள்ள நிறுவனத்தின் மூலம் இந்த பண பரிமாற்றங்களை மேற்கொண்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த நிறுவனம் அமெரிக்காவின் டெலவெயார் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பணம் மற்றொரு மாநிலத்திற்கும் மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்திலிருந்து முழு விபரங்களை பெறுவது சிரமமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கிடைத்துள்ள வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை தடங்கள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக