அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக இரகசியமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, புறநகர் பகுதியில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது சுமார் 70 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மோட்டார் சைக்கிள், 80,000 ரூபா பணம், இலத்திரனியல் தராசு மற்றும் பல நவீன கைபேசிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 31 வயதுடைய இளைஞர்கள் எனவும், அவர்கள் சிகை அலங்கார தொழிலில் ஈடுபட்டவர்கள் எனவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து கடல் மற்றும் தரை வழியாக போதைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்த ஒரு பெரிய வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வலையமைப்பின் முழு பின்னணியை கண்டறிய மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக