இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கல்வி அமைப்பை திட்டமிட்டு சிதைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட கல்வி மட்டுமல்லாது முழு வடக்கு மாகாண கல்வி அமைப்பையும் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில், இந்த செயல்களில் வடக்கு மாகாண ஆளுநரும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
அவரது கூற்றுப்படி, ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் வடக்கு மாகாணத்தில் “சேவையின் தேவை” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் முறைகேடாக நடந்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டி இடைக்காலத் தடை விதித்திருந்தது. பின்னர் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிப்பாட்டின் பின்னர் அந்த தடை நீக்கப்பட்டாலும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலைமை, வடக்கு மாகாண கல்வி தரத்துக்கும் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து விரைவில் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக