இலங்கையில் இன்று கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறவுள்ள பேரணிகளின் பாதுகாப்பிற்காக சுமார் 30,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மினுரா செனரத் தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்தின் மொத்த ஆளணியில் சுமார் 96 சதவீதமானோரை இன்று விசேட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். தேவையேற்படின் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) வரவழைக்கப்படுவர்.
இம்முறை தேசிய மக்கள் சக்தி (NPP) நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் பேரணிகளை நடத்துகிறது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மகரகம மற்றும் நுவரெலியா பேரணிகளில் பங்கேற்கவுள்ளார். அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய முக்கிய கட்சிகளும் கொழும்பின் பல்வேறு பகுதிகளில் தமது வலிமையைக் காட்டத் தயாராகியுள்ளன. இதன்காரணமாகக் கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக