இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) சமீபத்திய சந்தை பகுப்பாய்வு அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டு இலங்கைக்கு 2.3 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதில் அண்டை நாடான இந்தியா, 531,511 பயணிகளுடன் (சுமார் 23%) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காக வருகை தந்த போதிலும், அவர்களின் தினசரி சராசரிச் செலவு 176.49 டொலர்களாக மட்டுமே காணப்படுகிறது. இதேபோல் பங்களாதேஷ் பயணிகளின் செலவினம் மேலும் குறைவாக, அதாவது 129.28 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
எண்ணிக்கை அடிப்படையில் ஆசிய நாடுகள் முன்னிலை வகித்தாலும், இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் சந்தையாக ஐரோப்பிய நாடுகள் விளங்குகின்றன. குறிப்பாக, 212,277 பயணிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள பிரித்தானியாவின் சுற்றுலாப் பயணி ஒருவர் நாளொன்றுக்குச் சராசரியாக 263.38 டொலர்களைச் செலவிடுகின்றார். அதேவேளை, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியப் பயணிகளிடம் இருந்து தரவுகளைச் சேகரிப்பதில் சவால்கள் நிலவுவதாகவும், பலர் தங்களது பயணத் தகவல்களைச் சரியாக வழங்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாக, அண்டை நாடுகளின் வருகையைத் தக்கவைத்துக்கொண்டு, அதிக வருமானம் ஈட்டித்தரும் மேற்கத்திய நாடுகளைக் கவரும் 'இரட்டை சந்தை மூலோபாயத்தை' (Double Market Strategy) இலங்கை பின்பற்ற வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக