வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர், தனது வீட்டு மலசல கூடத்திற்கு அருகில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது இயற்கையான மரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விரிவான மருத்துவப் பரிசோதனையில், முதியவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், உயிரிழந்த முதியவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் நீண்டகாலமாக வீட்டு வாடகை பணம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது கண்டறியப்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், குறித்த நபர் முதியவரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவரைக் கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக