மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் உள்ள நபதியே (Nabatieh) நகரின் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான கட்டடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இக்கோர சம்பவத்தில் பணியில் இருந்த 13 அரசு பாதுகாப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக லெபனான் ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun), "அரசு நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்குவது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இருந்து எங்களைத் தடுத்துவிடாது" எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒருபுறம் ஈரானுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் லெபனான் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இத்தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவம் (IDF) இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக