துசித ஹல்லோலுவ மீதான துப்பாக்கிச்சூடு.. நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இரகசிய வாக்குமூலம்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர், துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சந்தேக நபர் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் (06.06.2025) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலங்கள் கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் பாரிஸ் என்ற சந்தேக நபரால் இந்த வாக்குமூலம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சந்தேக நபர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற நீதிமன்றத்திலிருந்து உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நேற்று உத்தரவிட்டார், அன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.