அகமதாபாத் விமான விபத்துக்கு பின்னர் ஏர் இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தனது சர்வதேச விமான சேவைகளை அடுத்த சில வாரங்களுக்கு 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த குறைப்புகள், 2025 ஜூன் 20 முதல், ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமது செயல்பாடுகளின் ஸ்திரத்தன்மை, சிறந்த செயல்திறன் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்த சேவை குறைப்புகளால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம், மன்னிப்பைக் கோருவதாக, ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தை எந்த செலவும் இல்லாமல் மறு அட்டவணைப்படுத்தவோ அல்லது அவர்களின் விருப்பப்படி முழு பணத்தைத் திரும்பப் பெறவோ ஒரு தேர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தமது விமானம் ஒன்று, கடந்த வாரம் எதிர்கொண்ட அனர்த்தம் மற்றும் அதன் பின்னர் வந்த விமானத் தாமதங்களுக்கு மத்தியிலேயே, இந்த அறிவித்தலை, ஏர் இந்தியா விடுத்துள்ளது.