உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (12.03.2026) காலை வர்த்தக ஆரம்பத்தின் போது மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 110 டொலர்களைத் தொட்டிருந்த விலை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் "போர் விரைவில் முடியும்" என்ற அறிவிப்பால் சற்று குறைந்திருந்தது. இருப்பினும், மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை சீரடையாததால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விலையை மீண்டும் ஏறுமுகமாக்கியுள்ளது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் G7 நாடுகள் ஒன்றிணைந்து 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைச் சந்தையில் வெளியிட ஒப்புக்கொண்ட போதிலும், தற்போதைய போர்ச் சூழலால் இந்த விலை உயர்வைத் தடுக்க முடியாமல் போயுள்ளது.
இந்த சர்வதேச விலை ஏற்ற இறக்கங்கள் இலங்கையில் ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. உலகச் சந்தையில் ஏற்படப்போகும் இத்தகைய திடீர் மாற்றங்களைச் சமாளிக்கும் நோக்கில், கடந்த இரு தினங்களுக்கு முன்னரே இலங்கையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியுள்ளதால், வரும் மாதங்களில் இலங்கையில் போக்குவரத்து, உற்பத்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மேலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக