மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்தி வந்த பெண் ஒருவர், டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலைவாய்ப்புகளுக்காக நபர்களை சேர்த்த குற்றச்சாட்டில் கடந்த 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் முல்லேரியா பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் செயல்படும் இந்த போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை சுற்றிவளைந்தனர். அதில் நிறுவனம் நடத்தி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 154 கடவுச்சீட்டுகள், வேலை ஒப்பந்தங்கள், மருத்துவ அறிக்கைகள், வேலை கோரும் விண்ணப்பங்கள் மற்றும் பல நபர்களின் சுயவிபரக் கோவைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பெண் 2016 ஆம் ஆண்டில் பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமத்தைப் பெற்று வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால், 11 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதற்காக அவரது உரிமம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் குறித்த பெண்ணிற்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. கைது செய்யப்பட்ட பெண் நேற்று கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக