வருகிற 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடாது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்தப் போட்டித் தொடரில் 20 நாடுகள் பங்கேற்க உள்ள நிலையில், வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இது தொடரில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், பாகிஸ்தான் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிராக விளையாடமாட்டோம் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த முடிவில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். விளையாட்டு களத்தில் அரசியல் கலக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார். பிப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், தொடருக்கு கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக