மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்ட காலமாக இயங்கி வந்த ஒரு வெதுப்பகத்தில் கடும் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதை அடுத்து, சுகாதாரத் துறையினர் அந்த வெதுப்பகத்திற்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் தலைமையில், சுகாதார அதிகாரிகள் மற்றும் மன்னார் நகர சபை சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, குறித்த வெதுப்பகம் பல நாட்களாக மோசமான சுகாதார நிலைமையுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.
ஆய்வின் போது, அந்த வெதுப்பகம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்ததுடன், அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ்கள் இன்றி பணியாற்றியதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவகம் முழுமையாக சுகாதாரத் துறையினரால் பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில், பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை, எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை, உணவுப் பொருட்களில் பல்லி எச்சங்கள் மற்றும் தூசுகள் காணப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு கடுமையான சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், குறித்த வெதுப்பகத்திற்கும் அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் எதிராக சுகாதாரத் துறையினர் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக