இலங்கையின் முன்னணி கோடீஸ்வர தொழிலதிபர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, உலங்குவானூர்தி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது டட்லி சிறிசேன சிங்கப்பூரில் தங்கியுள்ளதாகவும், சுமார் 9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உலங்குவானூர்தியை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்வனவு தொடர்பான உடன்பாடு இன்று அல்லது நாளை எட்டப்படக்கூடும் என டட்லிக்கு நெருக்கமான தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
அரலிய அரிசி விற்பனை நிறுவனம் உட்பட 25க்கும் மேற்பட்ட வணிகங்களை நடத்தி வரும் டட்லி சிறிசேன, சமீப காலமாக ஆடம்பர வாழ்க்கை முறையால் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தார். குறிப்பாக, அவர் ஒரு ஆடம்பர ரோல்ஸ்-ராய்ஸ் காரை கொள்வனவு செய்தமை பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
அந்த வாகன கொள்வனவு தொடர்பாக பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உலங்குவானூர்தி கொள்வனவுக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த புதிய உலங்குவானூர்தி கொள்வனவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக