இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது தீவிரவாதத்திற்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும், தேசிய ஒற்றுமையே அரசின் முதன்மை இலக்கு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
133 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியிலிருந்து 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த சுதந்திரத்திற்காக இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையைச் சிந்திய முன்னோர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது என கூறினார்.
இந்த ஆண்டின் சுதந்திர தினக் கருப்பொருளான “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்பது வெறும் முழக்கமாக அல்லாமல், நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பலம் அதன் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ‘இனவாதம்’ மற்றும் ‘தீவிரவாதம்’ ஆகியவை நாட்டை சீர்குலைக்கும் மிக மோசமான சொற்கள் எனத் தெரிவித்தார். மக்கள் பிளவுபட்டால் நாட்டின் பலம் தளர்ந்து விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கல்வித்துறையில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், இலங்கையின் கல்வித்துறையில் ஒரு புதிய மாற்று யுகம் ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனிடையே, “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி தலைமையில் சிறப்பாக ஆரம்பமாகின. இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள், பல நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் உள்நாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக