பாணந்துறையிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில், ஆசிரியர் ஒருவர் கண்டித்ததன் காரணமாக மனமுடைந்த 14 வயதுடைய மாணவர், பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை, கெஸ்பேவ, கோனா மடித்த வீதியைச் சேர்ந்த குறித்த மாணவர், நேற்று தனது பாடசாலையில் நடைபெற்ற மாணவர்களின் கண்காட்சி நிகழ்வின்போது இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கண்காட்சியுடன் தொடர்புடைய கருத்துக்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவு செய்யும் வகையில், பாடசாலையில் ஒரு கருத்துப் புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. அந்த புத்தகத்தில் மாணவர் எழுதியிருந்த தகாத வார்த்தைகளை ஒரு ஆசிரியர் கவனித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குறித்த ஆசிரியர் மாணவனை எச்சரித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவர், மூன்றாவது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்று, ஒரு புத்தகத்தில் “Live or Die” என எழுதி, “சர், இதில் நான் என்ன செய்ய வேண்டும்?” என ஆசிரியரிடம் வினவியுள்ளார். அதற்கு “Live” என ஆசிரியர் பதிலளித்ததாக விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென மாணவர் நாற்காலியிலிருந்து எழுந்து ஓடி, பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர், முதலில் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடிப்படை சிகிச்சை வழங்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பியுலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாணவனின் தாயார் பல ஆண்டுகளாக அதே பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக