திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுக்களை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரே இந்த ரீட் மனுக்களை சமர்ப்பித்திருந்தனர்.
கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்களை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் இல்லை எனவும், அந்நிலையில் தங்களை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.
இதன் அடிப்படையில், தங்களை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதாக்கும் ரீட் கட்டளையொன்றை பிறப்பிக்குமாறும் அவர்கள் கோரியிருந்தனர். எனினும், முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக