யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பகுதியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான கனேடிய தூதரகத்தின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், இலங்கை அரசிடமிருந்து உரிய அனுமதி கிடைக்காத காரணத்தால் அவர்கள் புதைகுழி பகுதிக்குச் செல்லாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இறுதி நாளான 56ஆவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று புதன்கிழமை இடம்பெற்றன.
இதன்போது மதிய உணவு இடைவேளையின் போது கனேடிய தூதரக அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்காக கனேடிய தூதரகம் சார்பில் உரிய அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், புதைகுழி அகழ்வுப் பகுதிக்குச் செல்வதற்கான அனுமதி இலங்கை அரசிடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அகழ்வுப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் அல்லது ஏனைய தரப்பினர் வருகை தருவதற்கு அரசின் அனுமதியைப் பெற்று, பின்னர் நீதிமன்றத்தில் உரிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நடைமுறை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால் கனேடிய தூதரகம் சார்பில் நீதிமன்றத்தில் தேவையான விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதனையடுத்து, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தின் வாயில் பகுதி வரை வந்த கனேடிய தூதரகப் பிரதிநிதிகள், புதைகுழி அகழ்வுப் பகுதிக்குள் செல்லாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக