கொழும்பு – குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரை ஒன்றின் விகாராதிபதி, ஒருபுறம் விகாராதிபதியாகவும் மறுபுறம் குடும்ப வாழ்க்கை நடத்தும் கணவராகவும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விகாரையின் அறங்காவல் சபையினருக்கு குறித்த தேரரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விகாரை நிர்வாகம் தொடர்பான பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளம் தேரர், தனியார் பாடசாலை ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரை பயன்படுத்தி சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த திருமணம் குருநாகலில் அமைந்துள்ள குறித்த பெண்ணின் வீட்டில் இடம்பெற்றதாகவும், அவர் பௌத்த துறவி என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருமணத்துக்குப் பின்னர் குறித்த பெண்ணையும் அவரது பெற்றோரையும் குழந்தையையும் குருநாகல் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர இருமாடி வீட்டில் குடியமர்த்தியதுடன், அவருக்கு சொகுசு கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, தமது இரட்டை வாழ்க்கை தொடர்பில் ஊர் மக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், விக் அணிந்துகொண்டு பிரதேச செயலக அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி, விகாரையில் தான தர்மங்களாக கிடைக்கும் உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு குறித்த வீட்டுக்குச் சென்று ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விகாரையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட உணவுப் பொருட்களை அப்பகுதி மக்களுக்கும் பகிர்ந்துகொடுத்து, தனது நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படாத வகையில் செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் நன்கொடையாளர்களிடம் விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக நிதி தேவைப்படுவதாகக் கூறி இரண்டு முதல் மூன்று இலட்சம் ரூபாய் வரையான நன்கொடைகளை பெற்றுக்கொண்டு, அந்தப் பணத்தை குறித்த பெண்ணுக்காக செலவிட்டதாகவும் அறங்காவல் சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், விகாரைக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தெரியவந்ததைத் தொடர்ந்து, குறித்த தேரர் விகாரைக்கு வந்து சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக