ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா மீது, சிறார்களின் மனநலத்தை பாதிக்கும் வகையில் அதன் தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் நேற்று 18.08.2026 அன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 29 மாநிலங்கள் இணைந்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில், மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடக தளங்களில் தொடர்ச்சியான ஸ்க்ரோலிங் மற்றும் அல்காரிதம் தூண்டுதல்கள் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்தி சிறார்களை நீண்ட நேரம் தளங்களில் ஈடுபட வைக்கும் வகையில் வடிவமைத்துள்ளதாக மாநில சட்டவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் பெற்றோரின் கட்டுப்பாட்டை உறுதி செய்தல், மனநலத்தை பாதிக்கக்கூடியதாகக் கூறப்படும் அல்காரிதம்களில் மாற்றங்களை மேற்கொள்ளுதல் மற்றும் தானாக மறையும் செய்திகளை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மெட்டா நிறுவனத்தில் கட்டாயமாக அமுல்படுத்த வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின்போது மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைத் தவிர, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகளிலும் மெட்டா நிறுவனம் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் சிறார்களின் பாதுகாப்பு தொடர்பான சட்ட மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த வழக்குகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சமூக ஊடக நிறுவனங்களின் தள வடிவமைப்பு, அல்காரிதம் பயன்பாடு மற்றும் சிறார்களின் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக