ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலிருந்து வியட்நாமின் ஹனோய் நகரை நோக்கிப் புறப்பட்ட வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் திருப்பி முனிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
போயிங் 787 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம் புறப்பட்டபோது ஓடுபாதையின் எல்லையை கடந்து சென்றதாகவும், இதனால் விமானத்தின் பின்னால் அதிகளவில் தூசிப் படலம் எழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தை மீண்டும் தரையிறக்குவதற்கு முன்னர் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வானில் சுற்றியதாகவும், இதன்போது விமானத்தின் எரிபொருள் கணிசமான அளவு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் மீண்டும் தரையிறங்கிய பின்னர், வடக்கு ஓடுபாதையில் நகர முடியாமல் சிக்கியதால், அந்த ஓடுபாதை வழியான விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விமானங்கள் தெற்கு ஓடுபாதைக்கு மாற்றப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணிக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததாக வியட்நாம் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்கான துல்லியமான காரணத்தை கண்டறியும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து மேலதிக சோதனைகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக