மன்னார் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆலய வளாகத்திற்குள் தொல்லியல் திணைக்களம் பெயர்ப்பலகை ஒன்றை நாட்டியுள்ளமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் திருக்கேதீச்சரம் ஆலய வளாகத்திற்குள் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே குறித்த பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஆலய நிர்வாகத்திற்கு அறிவிக்காமல், இரவு நேரத்தில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளதாகவும், தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியின்றி இனி ஆலய வளாகத்தில் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரச திணைக்களம் ஒன்று ஆலய நிர்வாகத்திற்கு அறிவிக்காமல் இவ்வாறு பெயர்ப்பலகையை நாட்ட வேண்டியதன் அவசியம் என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் மற்றும் கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பிலும் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து சர்ச்சைகள் எழுந்திருந்ததாக சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, எதிர்காலத்தில் திருக்கேதீச்சரம் ஆலய வளாகத்திலும் பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து வரும் நிலையில், திருக்கேதீச்சரம் ஆலய வளாகத்தில் இரவோடு இரவாக பெயர்ப்பலகை நாட்டப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும் எனவும் சபா குகதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, அங்கு முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் வெளிப்படைத்தன்மையுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அறிவுறுத்தல்களுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக