நாட்டில் ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் அதிகரிப்பதன் மூலம் மக்களின் மனஅழுத்தத்தை குறைத்து, அனுபவமிக்க பணியாளர்களின் சேவையை நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின் சேவைக் காலத்தை நீடிக்க வேண்டும் என்ற கருத்துகளுக்கு தாம் முழுமையாக ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
இராணுவத்தில் சாதாரண வீரர்கள் சுமார் 20 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர், ஏறத்தாழ 45 வயதில் ஓய்வுபெற வேண்டிய நிலை காணப்படுவதாகவும், அந்தக் காலகட்டத்தில் அவர்களின் பிள்ளைகள் கல்வியைத் தொடர்ந்துகொண்டிருப்பதாலும் புதிய தொழிலில் ஈடுபடுவது பலருக்கு சிரமமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், இராணுவ அதிகாரிகள் 50 அல்லது 55 வயதிலும், அரச ஊழியர்கள் 60 வயதிலும் ஓய்வுபெறும் சூழலில், அவர்களது குடும்பப் பொறுப்புகள் தொடர்ந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பல நாடுகளில் ஓய்வூதிய வயது அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் 70 வயது வரை இராணுவத் தளபதிகள் மற்றும் நீதிபதிகள் சேவையாற்றும் நடைமுறை இருப்பதாக கூறினார்.
தாம் இராணுவப் பணியிலிருந்து விலகி இருபது ஆண்டுகள் கடந்திருந்தாலும், உடல் மற்றும் மனத் திறனில் இன்னும் முழுமையாக செயல்பட முடியும் எனக் குறிப்பிட்ட அவர், ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் உயர்த்துவது நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக