ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சிகளின் அண்மைய கூட்டிணைவு, நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக அல்லாது, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான முயற்சியாக இருக்கலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் அரசியல் ஒத்துழைப்பு புதிதான ஒன்றல்ல என்றும், கடந்த காலங்களிலும் அவர்கள் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகளும் மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் கூட்டணியாகவே தற்போதைய எதிர்க்கட்சியை மக்கள் பார்க்கின்றனர் என்றும், இந்த கூட்டிணைவால் அரசாங்கத்திற்கு எந்தவித அரசியல் அச்சுறுத்தலும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் இன்னும் பழைய அரசியல் அணுகுமுறைகளையும் சிந்தனைகளையும் பின்பற்றுவதாக சுட்டிக்காட்டிய டில்வின் சில்வா, அண்மையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான சந்திப்பில் கலந்துகொண்ட பலருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். அந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அபிவிருத்தித் திட்டங்கள் அல்லது மக்களின் எதிர்கால நலன் குறித்து அந்தக் கூட்டத்தில் எந்தவிதமான பயனுள்ள கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும், மாறாக மீண்டும் அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது மற்றும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தனது கொள்கைகளில் இருந்து பின்வாங்காது என்றும், நாட்டை முன்னேற்றும் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமை இருப்பதாக தெரிவித்த அவர், கடந்த காலங்களைப் போன்று அடக்குமுறைகள் இடம்பெறாது என்றும் கூறினார்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், தற்போது காணப்படும் சட்டரீதியான சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு உரிமை உள்ளதுடன், அவை தவறானவை எனக் கருதப்படின் அவற்றை மறுப்பதற்கான வாய்ப்பும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இருப்பதாக டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக