இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி மற்றும் ஜோதி தம்பதியரின் 3 வயது மகன் ஹரிகிருஷ்ணா கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், ஆரம்பத்தில் அது விபத்து என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த தந்தை, வீட்டைச் சுற்றியுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது சம்பவம் நடைபெற்ற நாளில் வெளிநபர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தமை தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், குழந்தையின் தாய்க்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையின் போது குழந்தை கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதுடன், சம்பவத்தை மறைப்பதற்காக கட்டிலில் இருந்து விழுந்து இறந்ததாக குடும்பத்தினரிடம் கூறி உடலை அவசரமாக அடக்கம் செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் குழந்தையின் தாயும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் மரணத்தைச் சுற்றியுள்ள முழு உண்மையையும் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக