கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் வைத்தியரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் நபரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் குறித்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரின் தாயார் மற்றும் சகோதரர் வசித்து வரும் நாரம்மல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர். இதன்போது, சந்தேகநபரின் மூத்த சகோதரர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
அவரின் வாக்குமூலத்தின் படி, சந்தேகநபர் சிறுவயது முதலே பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், பலரிடம் பணம் மற்றும் பொருட்களை ஏமாற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பல பகுதிகளில் பெண்களை ஏமாற்றி பண மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தம்பி என்ற உறவு இருந்தபோதிலும், அவரது செயல்பாடுகள் காரணமாக அவரை சந்திக்கவோ அவரது முகத்தைக் காணவோ விரும்பவில்லை என சகோதரர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், சந்தேகநபர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவரின் இருப்பிடம் அல்லது நடமாட்டம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக