நுவரெலியா மாவட்டத்தின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறிய நிலையில், தனது மகனை தாக்கி உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 30 வயதுடைய ராஜ்குமார் ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். திருமணமான அவர், மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்த மகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையில் பணம் தொடர்பான கருத்து வேறுபாடு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற இரவு, வீட்டில் தாய் இல்லாத சந்தர்ப்பத்தில் சமையலறையில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தந்தை மகனை தடியால் தாக்கியதாகவும், தாக்குதலின் காரணமாக அவர் சுயநினைவை இழந்து தரையில் விழுந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், தரையில் விழுந்த பின்னரும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பின்னர் அவரை படுக்கையறையில் உள்ள கட்டிலில் கொண்டு சென்று வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சந்தேகத்தின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழப்பு தொடர்பான நீதவான் விசாரணையை வெலிமடை நீதவான் முன்னெடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக