உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் எரிபொருள் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உலக சந்தையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களின் பலன்களை மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் உடன்படிக்கை காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், அந்த உடன்படிக்கை இன்னும் இறுதிப்படுத்தப்படாத காரணத்தால் உலக சந்தையில் ஒரு வகையான நிச்சயமற்ற நிலை தொடர்கின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கை எதிர்வரும் நாட்களில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அதன் பின்னர் உலக பொருளாதார சூழ்நிலையிலும் எண்ணெய் சந்தையிலும் மேலும் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என நம்பப்படுகின்றது.
அந்த மாற்றங்களின் நன்மைகள் இலங்கை போன்ற நாடுகளுக்கும் கிடைத்தால், அதன் பயன்களை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் திகதி அல்லது அளவு குறித்து உறுதியான அறிவிப்பை வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த மாதத்திற்கான பெரும்பாலான எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதுடன், மேலும் ஒரு மசகு எண்ணெய் கப்பல் மட்டுமே வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது எரிபொருள் விலைகளை நிலையான மட்டத்தில் பேணுவதற்காக திறைசேரி மூலம் கணிசமான நிதி மானியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஏப்ரல் மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட முதற்கட்ட எரிபொருள் மானியத் திட்டத்திற்காக 100 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மானிய காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலக சந்தை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், தற்போதைய நிலையில் அவசர முடிவுகளை எடுப்பதை விட மாத இறுதி வரையிலான சந்தை மாற்றங்களை ஆராய்ந்த பின்னரே பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக