உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த ஆறு நாட்களாகக் காணாமல் போய் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த அனுபவமிக்க ஷெர்பா வழிகாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
52 வயதுடைய தாவா ஷெர்பா, கடந்த மே 29 ஆம் திகதி எவரெஸ்ட் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது கடைசியாகக் காணப்பட்டார். அதன் பின்னர் அவர் பேஸ் கேம்பை வந்தடையாததால், மீட்புக் குழுக்கள் மற்றும் குடும்பத்தினர் அவரைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். எனினும், கடுமையான வானிலை மற்றும் சவாலான பனிப்பாதைகள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
நாட்கள் கடந்தும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தாவா உயிரிழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர். இதனால், அவரது மனைவியும் மகளும் பாரம்பரிய இறுதிச் சடங்குகளை கூட ஆரம்பித்திருந்தனர்.
ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், கும்பு பனிப்பொழிவு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், பனிச்சரிவுகளுக்கிடையில் தனியாக ஊர்ந்து கொண்டிருந்த தாவா ஷெர்பாவைக் கண்டுபிடித்தனர். பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் உயிர் தப்பியிருந்த அவர் கடுமையாக சோர்வடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட உடனேயே அவருக்கு அவசர உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டதுடன், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாவா உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தபோது முதலில் அதை நம்ப முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது புகைப்படங்களைப் பார்த்து உறுதிப்படுத்திய பிறகே நம்பிக்கை ஏற்பட்டதாகவும், அது தங்களது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணமாக இருந்ததாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் எவரெஸ்ட் மலையேற்ற வரலாற்றில் அரிதான உயிர் பிழைப்பு நிகழ்வாகக் கருதப்படுவதுடன், மனித மன உறுதி மற்றும் வாழ்வதற்கான போராட்டத்தின் சக்தியை உலகிற்கு மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. இந்த ஆண்டின் மலையேற்ற சீசனில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ள நிலையில், பல உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக