இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் (International Boxing Tournament) கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்றும் வெற்றிக் கிண்ணங்களைக் குவித்த வடமாகாணத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (பலாலி) ஊடாகத் தாயகம் திரும்பியுள்ளனர்.
குத்துச்சண்டையில் உள்ள 8 பிரிவுகளில், இதுவரை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருந்து எவரும் பங்கெடுக்காத ஒரு கடினமான பிரிவில் முதன்முறையாகப் பங்கேற்று இவர்கள் இந்த வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் நடைபெற்ற இப்போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பின்வரும் வீர வீராங்கனைகள் பங்கேற்றுப் பதக்கங்களை வென்றனர்:
பிரபாகரன் ரதுக்ஸன்
நகுலேஸ்வரன் சிறீஹரிஸ்
லெனின் சானுராஜ்
முஹமட் றிலாஸ்
புஸ்பநாதன் அஜந்தா
பயிற்றுவிப்பாளர்: தியாகராஜா நாகராஜா (வீரர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வழிநடத்தியவர்).
சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ள இந்த வீரர்கள், தங்களின் பயணத்தின் பின்னே இருந்த வறுமையையும் தடைகளையும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர்:
"இந்த சர்வதேசப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இந்தியா செல்வதற்கு எங்களுக்கு அரசாங்கமோ அல்லது வேறு எந்தவொரு தனியார் நிறுவனங்களோ எவ்வித நிதி உதவியும் வழங்கவில்லை. எங்களின் சொந்த முயற்சியிலும், பெருமளவில் கடன் பட்டும், சில போட்டியாளர்கள் தங்களது வீட்டில் இருந்த அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்துமே இதற்கான பணத்தைச் சேர்த்துப் போட்டியில் கலந்துகொண்டோம்."
நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் சர்வதேசப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய இந்வீரர்களுக்குப் பலாலி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர்கள், வடக்கு கிழக்கில் மறைந்துள்ள இவ்வாறான தற்காப்புக் கலைத் திறமைகளை வளர்ப்பதற்கும், எதிர்காலத்தில் எவ்வித பொருளாதாரச் சுமையுமின்றி சர்வதேசப் போட்டிகளில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்துவதற்கும் அரசாங்கம், விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் புலம்பெயர் நிறுவனங்கள் இணைந்து தங்களுக்கு முறையான ஸ்பான்சர்ஷிப் (Sponsorship) மற்றும் நிதி உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக