கண்டி, தலத்துஓயா பகுதியில் வெளிநாட்டில் வசித்து வரும் வைத்தியர் ஒருவரின் வீட்டில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களைத் திருடிய 28 வயது இளைஞனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வீட்டில் காவல் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இந்த இளைஞனுக்கு, வைத்தியர் மனிதாபிமான அடிப்படையில் பல உதவிகளைச் செய்துள்ளார். குறிப்பாக இளைஞனின் இதய அறுவை சிகிச்சைக்காக 46 இலட்சம் ரூபாயும், அவரது மனைவியின் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காக 40 இலட்சம் ரூபாயும் என மொத்தம் 86 இலட்சம் ரூபாயை வைத்தியரே செலவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம், முச்சக்கர வண்டி மற்றும் தையல் இயந்திரங்கள் எனப் பல உதவிகளைப் பெற்றுக் கொண்டும், கடந்த ஓராண்டாகச் சிறுகச் சிறுக பொருட்களைத் திருடி கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்து வந்துள்ளார். வைத்தியரின் தோழி வீட்டிற்குச் சென்றபோது பொருட்கள் மாயமானதைக் கண்டு கேட்டபோது, இந்த இளைஞனே பொலிஸில் புகார் அளித்து நாடகமாடியுள்ளார். பின்னர் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் திருட்டில் இளைஞனுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது. குளிரூட்டிகள், மின்பிறப்பாக்கிகள் உள்ளிட்ட பல கோடி பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட நிலையில், ஒரு பகுதியை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரைத் தேடி தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகள்
இலட்சம் செலவில் இதய சிகிச்சை, குழந்தைப்பேறு - வாழ்வளித்த வைத்தியரின் வீட்டிலேயே கோடி கணக்கில் திருடிய இளைஞன் கைது!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக