Odisha மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இடம்பெற்ற மனதை உருக்கும் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீர்குலா கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சுமார் 30 குழந்தைகளின் உயிரை, ‘காளி’ என அழைக்கப்பட்ட தெருநாய் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த விஷப்பாம்பு குழந்தைகளுக்கு ஆபத்தாக மாறிய நிலையில், அந்த நாய் திடீரென பாம்பை எதிர்த்து போராடத் தொடங்கியது. குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாம்பு அருகில் செல்லாமல் தடுத்து, கடுமையாக சண்டையிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் போது, பாம்பு பலமுறை காளியை கடித்திருந்தாலும், அது பின்வாங்காமல் இறுதிவரை போராடி பாம்பை கொன்றுள்ளது. ஆனால், கடுமையான விஷப்பாம்பு கடியால், சிறிது நேரத்தில் காளியும் உயிரிழந்தது.
30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய இந்த தியாகத்தை நினைவுகூர்ந்து, அந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாய்க்கு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர். மனிதநேயத்தையும், விலங்குகளின் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் இந்த சம்பவம் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் உணர்ச்சி அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக