31.05.2024 இன்று ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட 20ஆம் ஆண்டு நினைவேந்தல் !
31.05.2024 இன்று ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட 20ஆம் ஆண்டு நினைவேந்தல் !
நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் நடேசன் 20 வருடங்களாக வீரகேசரி பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றியவர். அத்துடன் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதி தலைவராகவும் பணியாற்றி இருந்தார்.
அந்நிலையில் 31.05.2004அன்று மட்டக்களப்பிலிருந்த தனது வீட்டிலிருந்து அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் வைத்து சிறிலங்கா இராணுவத்தின் துணைப்படையாக இயங்கிய கருணா – பிள்ளையான் – இனியபாரதி குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பல தடவைகள் சிறிலங்கா இராணுவம் மற்றும் துணைக்குழுக்களால் நேரிலும், தொலைபேசி மூலமும் கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தார். அந்நிலையில் கூட அவர் அஞ்சாது மட்டக்களப்பு மண்ணிலிருந்து தமிழ் மக்களிற்காக குரல் கொடுத்த ஒரு துணிச்சலான ஊடகவியலாளர் ஆவார்.
அவரது வீட்டின் மீது 2000ம் ஆண்டு கிரனைட் வீசி தாக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் அவரது வீடு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்தது. அத்துடன் அங்கே ஈ.பி.டிபி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் (வரதராஜப்பெருமாள் அணி), ரசீக் குழு மற்றும் சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவு முகாம்கள் அமைந்திருந்தன.
2001 யூன் 17 ஆம் திகதி இவரை விசாரணைக்கு அழைத்த இலங்கை இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ”இராணுவத்திற்கெதிரான செய்திகளை வெளியிட்டால் நீர் கைது செய்யப்படுவீர்” என அச்சுறுத்தியதாக ‘ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு’ CPJ தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இராணுவத்தின் தொடர் அச்சுறுத்தலையும் மீறி, தனது ஊடகப் பணியை முன்னெடுத்த நடேசன், கருணாவின் பிரிவோடு கிழக்கில் பலி எடுக்கப்பட்ட முதலாவது மூத்த ஊடகவியலாளர் ஆனார்.
தமிழ்மக்களின் மீதும், மண்ணின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றுறுதியின் காரணமாக அவருக்கு ”நாட்டுப்பற்றாளர்” என்ற கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் அநீதிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்த பல ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரச பயங்கரவாதம் பலியெடுத்திருந்தது
ஆவண வெளியீட்டுப் பிரிவு,
நினைவேந்தல் 31.05.2004 .5மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இவ் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் ,அமைப்பாளர் ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்.