டெங்கு பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறையும்!

டெங்கு பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறையும்!
ஏனைய வருடங்களை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 64 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அது இன்று இரண்டு வலயங்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுகாதார இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனவரி முதல் இந்த வருடம் வரை 20,365 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 7289 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 மட்டுமே எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.