சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!
சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (24.10.2023) விஜயம் மேற்கொண்ட கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு சென்று அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள அத்தோடு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக வினவிய போது, தகவலில் உண்மைநிலை இருப்பது போல் தெரியவில்லை. என்னுடைய இராஜாங்க அமைச்சுக்கு தான் இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்தை கண்காணிக்கின்ற , செயற்படுத்துகின்ற பொறுப்பை கொடுத்திருக்கின்றேன்.
அவர் நேர்மையாக , நியாயமாக, சட்ட பூர்வமாக செய்ததாக தான் கூறுகிறார். இலங்கையை சூழ வளம்மிக்க கடல் இருக்கின்ற நிலையில் வெளிநாடொன்றில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது என வினவிய போது, இலங்கை கடற்தொழில் கூட்டுஸ்தாபனத்திற்கு எனது பணிப்புரை என்னவென்றால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையில் மிக குறுகிய அளவில் அறுவடை செய்யப்படுகின்ற அல்லது அறுவடை செய்யப்படாத மீன்களை தான் இறக்குமதி செய்யலாம் என கூறியிருக்கின்றேன்.
நியாயமான விலையில், தரமானதாக, திணைக்களத்தின் சட்ட திட்டங்கள் உட்பட்டவையாக இருக்க வேண்டும். இவ்வாறே இறக்குமதி செய்ய முடியும் என கூறியிருக்கின்றேன்.
அந்தவகையில் தான் இறக்குமதி செய்ததாக கூறுகிறார்கள். அதில் முறைகேடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவ்வாறு இருக்குமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆனால் ஊடகங்களில் தவறான செய்திகள் வந்திருக்கின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன். தவறுகள் ஏதும் கிடைக்கவில்லை. இலங்கையில் மின்சார கட்டண அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன என வினவிய போது, இன்று நாடு இருக்கின்ற நிலையிலும் உலகத்தினுடைய போக்குகள் யுத்தங்கள் சூழ்ந்திருக்கின்ற சூழலில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாமல் தான் இருக்கிறது.
இது அனைவரையும் பாதிக்கிறது. ஆகையால் அதிலிருந்து நாங்கள் மீள வேண்டும். அதற்காக தான் இயற்கை மின்சார உற்பத்திக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம்.
காற்றாடி, சூரிய ஒளி இவ்வாறு விரைவாக செய்து முடிப்போமாக இருந்தால் மின்விலையேற்றத்திலிருந்து, பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ளலாம்.
சுகாதார அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான உண்மைநிலை என்ன? ஊழல் மோசடியால் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது அது தொடர்பாக வினவிய போது, பதவி நீக்கம் என்பதைவிட பதவியில் மாற்றங்கள் சூழலுக்கு ஏற்ப நடந்திருக்கிறது. அதில் எந்தவித உள்நோக்கங்களும் இல்லை.
பொதுவாக எதிர்கட்சிகளின் புரளியாக தான் இருக்குமே ஒழிய வேறு காரணங்கள் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை என தெரிவித்தார்.