கனடாவில் நகைக் கடை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நால்வரை தேடும் பொலிஸார்

கனடாவின் வாகன் நகரில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கடந்த வாரம் நடந்த ஆயுத முனையில் கொள்ளை முயற்சியை மேற்கொண்ட நான்கு பேரை யோர்க் போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 24ஆம் திகதி இரவு 9 மணியளவில் சென்வே பாலிவர்டு மற்றும் ஹைவே 427 பகுதியில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கொள்ளை முயற்சி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடை மூடப்பட்டதன் பின்னர் வெளியே வந்த ஒருவரிடம் நான்கு பேரும் கொள்ளையிட முயன்றுள்ளனர்.
குறித்த நபர் விரைவாக தனது வாகனத்திற்குள் நுழைந்து கதவுகளை பூட்டியதனால், கொள்ளையர்கள் அவரை அடைய முடியவில்லை. கொள்ளையர்கள், வாகனத்தின் ஜன்னலை சுத்தியல் கொண்டு அடித்து உடைக்க முயன்றுள்ளனர்.
மேலும் ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த நபருக்கு எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய நான்கு சந்தேகநபர்களும் 15 முதல் 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் எனவும் அவர்கள் கருமையான உடைகள் அணிந்து, முகத்தை மறைத்திருந்தனர் எனவும் கூறப்படுகின்றது.