ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வரகரிசி உப்புமா… இப்படி செய்து பாருங்க

சிறு தானிய வகையை சேர்ந்த வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்துகொள்ளவதற்கு இது சிறந்த தெரிவாகும்.
இந்த அரிசியில் கொழுப்பு அதிகம் இல்லை. இதில் இருக்கும் கொழுப்பும் நல்ல கொழுப்பு என்பதால் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது.
மூளை செல்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் தசைகள், எலும்பு மஜ்ஜை, பல் எனாமல் போன்றவற்றை காக்கவும் இந்த வரகரிசியில் செறிந்துள்ள அமினோ அமிலங்களின் பெரிதும் துணைப்புரிகின்றது.
அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான அமைப்பை சீராக செயல்பட செய்கின்றது. அத்துடன் மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது வரபிரசாதமாகும். அவ்வளவு ஆரோக்கிய நம்தைகளை கொண்டுள்ள வரகரிசியில் அருமையான சுவையில் உப்புமா செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் வரகரிசியை தண்ணீரில் இரண்டு முறை நன்றாக நன்கு கழுவி, அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 1/2 மணிநேரம் வரையில் ஊறவிட வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை போட்டு நன்றாக தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்கு வதக்கிக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி, அதனுடன் நறுக்கிய கேரட், பீன்ஸை சேர்த்து, உப்பு தூவி 5 நிமிடகளுக்கு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் ஊற வைத்துள்ள வரகரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறிவிட்டு, 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்கினால், அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த வரகரிசி உப்புமா தயார்.