யாழில் பணத்தினை காலால் மிதித்த வர்த்தகருக்கு எதிராக விசாரணை!
யாழில் பணத்தினை காலால் மிதித்த வர்த்தகருக்கு எதிராக விசாரணை!
யாழ்ப்பாணத்தில் வர்த்தகரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் காணொளிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சணங்களைப் பெற்றிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது, தனது சட்டை பையில் இருந்த பெருமளவான ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நிலத்தில் போட்டு சப்பாத்து காலால் மிதித்திருந்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து குறித்த நபருக்கு பெருமளவானோர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்ததுடன் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
அவர் மன்னிப்பும் கோரியிருந்தார். இந்நிலையில் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் மேற்படி வர்த்தகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று(22) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 55ஆம் பிரிவின் நியதிகளில் இலங்கை மத்திய வங்கியினது ஆளுகைச் சபையின் அதிகாரமின்றி எந்தவொரு நபரும், நாணய தாள்களை வெட்டுதல், துளையிடுதல் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் எந்தவொரு நாணயத்தினையும் உருச் சிதைத்தல், எந்தவொரு நாணயத் தாளிலும் அச்சிடுதல், முத்திரை பதித்தல் அல்லது எதனையும் வரைதல் அல்லது எந்தவொரு நாணயத் தாள்களின் மீதும் ஏதாவது சீல் அல்லது முத்திரைகளை ஒட்டுதல், ஏதேனும் நாணயத் தாளின் மீது விளம்பரமொன்றின் தன்மையையொத்த அல்லது வடிவத்தினை இணைத்தல் அல்லது ஒட்டுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.