இலங்கை- சீனா 13ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் பீஜிங் நகரில் திங்களன்று ஏற்பாடு!
இலங்கை- சீனா 13ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் பீஜிங் நகரில் திங்களன்று ஏற்பாடு!
சீனாவின் பீஜிங் நகரில் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள சீன மக்கள் குடியரசுடனான 13ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளில் பங்குபற்ற இலங்கையின் தூதுக் குழுவினர் செல்லவுள்ளனர்.
இந்த தூதுக் குழுவினருக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை தாங்கவுள்ளார்.
இந்நிலையில் சீன மக்கள் குடியரசின் வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் சன் வீடாங்குடன் அவர் ஆலோசனை அமர்வுகளுக்கு இணைத் தலைவராக செயலாற்றவுள்ளார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு ஈடுபாட்டுக்கான துறைகளில் முன்னேற்றம் குறித்து இந்த விவாதங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைகளுக்கான இலங்கையின் தூதுக் குழுவில் பீஜிங்கில் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் மஜிந்த ஜயசிங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர். இரு தரப்பு அரசியல் ஆலோசனைகளின் 12ஆவது சுற்றுப் பேச்சு கடந்த 2023 மே மாதம் 30ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.