2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையை முன்வைத்தார் ஜனாதிபதி!
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையை முன்வைத்தார் ஜனாதிபதி!
அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிகரிப்பு
• ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2,500 ரூபாவினால் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு
நான்கு புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு முன்மொழிவு
1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 7,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 17,800 ரூபாவாக 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இன்று (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போது தெரிவித்தார்.
அத்துடன், இந்தக் கொடுப்பனவின் அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதல் மாதாந்த சம்பளத்துடன் சேர்த்து, ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிலுவைத் தொகை அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் தவணை முறையில் ஆறு மாதங்களில் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவிலிருந்து 6,025 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு 2024 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்வியை விரிவாக்கும் நோக்கில் நான்கு புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அவையாவன, சீதாவக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் என்பனவாகும்.
வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைப்பதற்கு ஜனாதிபதி இன்று மு.ப. 11.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தை வந்தடைந்தார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைப்பதற்கு ஆரம்பித்தார். சுதந்திர இலங்கையின் 78வது வரவு செலவுத் திட்ட உரை இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டது.
வரவுசெலவுத்திட்ட உரையை சமர்ப்பித்த பின்னர், கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திரிகள், உறுப்பினர்களுக்கான உணவகத்தில் நடைபெற்ற மதிய போஷணத்தில் இணைந்து கொண்டனர்.
2024ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த செலவீனம் ஏறத்தாழ 7,833 மில்லியன் ரூபாவாக அமைந்திருப்பதுடன், இதில் பொதுச் சேவைக்கான செலவீனத்துக்கு 3,861 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை (14) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது தினமும் மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை 5 வாய்மொழி மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டள்ளது. அதனைத் தொடர்ந்து பி.ப 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை விவாதம் நடைபெறும். வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.