பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்?…
![பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்?…](https://likedtamil.lk/wp-content/uploads/2023/11/IMG_20231103_102504-718x560.jpg)
பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்?…
எமது மண்ணிலே தற்பொழுது அன்பு, இரக்கம்,கருணை மற்றும் சேவை செய்யும் மனதிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறு வயது தொடக்கம் அன்பினையும் அறத்தினையும் ஊட்டி குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யக்கூடிய நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும்.
சைவ மக்களின் பாரம்பரியத்திலே விஜயதசமி நன்நாளிலே கல்வியின் அத்திவாரமாக ஏடு தொடக்கும் நிகழ்வு மிகவும் முக்கியம் பெறுகின்றது.
நம்முடைய முன்னோர்கள் மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் தெய்வீகத் தன்மைியனை நிலை நிறுத்தி ஒவ்வொரு கருமங்களும் தெய்வத்தின் ஆசியுடன் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் பல காரியங்களை சம்பிரதாயங்களாக உருவாக்கி வைத்தார்கள்.
குறிப்பாக தெய்வங்களை வழிபாடு செய்து குருவினை நாடி பெரியோர்கள் அருகினில் நிற்க பிள்ளைகளிற்கு ஏடு தொடக்குகின்ற பாரம்பரியம் எமது வாழ்வியல் பண்பாட்டிலே உள்ளது.
ஏடு தொடக்குகின்ற போது அரிசியிலே அ, ஆ என்ற எழுத்துக்களை எழுதி ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.
இந்த அரிசியிலே அ, ஆ என்ற எழுத்துக்களை எழுதுவதற்கு ஒரு தனி மரபு உண்டு. எங்களுடைய அம்பாள் தானிய லக்சுமியாக இருக்கின்றாள். உன்னுடைய வாழ்விற்கு நீயே வழி தேட வேண்டும் என்றால் நீ நன்றாக படிக்க வேண்டும் என்ற செய்தி இதிலே சொல்லப்பட்டுள்ளது.
உன்னுடைய உணவிற்கும், வாழ்விற்கும் பிறரை நம்பிருக்காது நீயே அதை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் அதற்கு நீ நன்றாக படிக்க வேண்டும் என்ற செய்தியை சொல்வதற்காகவே அரிசியிலே அ, ஆ என்ற எழுத்துக்களை எழுது ஏடு தொடக்கப்படுகின்றது.
தமிழில் உள்ள முக்கியமான எழுத்துக்களை இந்த உலகிற்கு தந்தவர் அகத்திய முனிவர் ஆவார். உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள் என்ற தமிழ் எழுத்துக்களை தானிய லட்சுமியாக இருக்கின்ற அம்பாள் பாரா சக்தியின் வடிவமாக உள்ள அரிசியின் மேலே இந்த உயிர் எழுத்துக்களை எழுது,
ஏழு ஜென்மங்களிற்கு வருகின்ற கல்வியினை முறையாக பெறுவதற்கு இந்த ஏடு தொடக்கும் நிகழ்வு தானிய லட்சுமியாக இருக்கின்ற அம்பாள் பாரா சக்தியினை சாட்சியாக வைத்து நடைபெறுகின்றது.
எனவே பெற்றோர்கள் ஏடு தொடக்கும் நிழ்வினை வெறும் சடங்காக மட்டும் பார்க்காமல் தானிய லட்சுமியாக இருக்கின்ற அம்பாள் பாரா சக்தியின் அருளை வேண்டி நன்றாக கும்பிட வேண்டும்.
தங்களது பிள்ளைகள் ஏழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து வருகின்ற இந்த கல்வியினை முறையாக கற்க வேண்டும் அதன் மூலம் சிறந்த கல்வியறிவு உடைய பிள்ளைகளை நாம் பெற்றோம் என மகிழும் படியாக தங்களது பிள்ளைகளை கல்வியிலே உயர்த்த பாடு பட வேண்டும்.
சிறந்த கல்வியைப் பெற்று நல்ல ஆன்மீக பயணத்திலே தர்மத்தின் வழியிலே பிள்ளைகள் வளர வேண்டும் என்ற நல்ல மனதுடன் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
கற்க மறுப்பவர் வாழ மறுப்பவர் என்ற சுவாமி இராமகிருஷ்ண பரம கம்சர் அவர்களது கருத்தினை குழந்தைகளிற்கு சின்ன வயது தொடக்கம் சொல்லி கொடுத்து கல்விதான் நல்ல வாழ்வினைத் தரும் என்ற உயர்ந்த உண்மையினை நாளும் பொழுதும் பிள்ளைகளிற்கு சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்.
உணவு ஊட்டுகின்ற போது வீனான வார்த்தைகளையும் வீனான பொழுது போக்கு செயற்பாட்டினையும் கைவிட்டு உண்மையான தர்ம வாழ்வு பற்றி சிறு சிறு கதைகளாக சொல்லி வளர்க்க வேண்டும்.
கல்விச் செல்வம் மிக மேலான செல்வம் ஆகும்.
ஒருமைக்கண் தான்கற்ற
கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்
புடைத்து.
என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் என்னவென்றாள் ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பதாகும்.
ஏழு ஜென்மங்களிற்கும் பின் தொடர்ந்து வரக் கூடியது கல்வி ஒன்றுதான். இந்தக் கல்வி அறத்தினுடைய வடிவமாகவும் உள்ளது.
எப்பொருள் யார்யார்வாய்க்
கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்ப
தறிவு.
என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் என்னவென்றாள் எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பதாகும்.
பிள்ளைகள் மெயப்பொருளை காண்பதற்கு நன்றாக கற்க வேண்டும். அவர்கள் கல்வியினை பொருள் உணர்ந்து மிகவும் ஆழமாக கற்க வேண்டும். இத்தகைய கல்வியின் அத்திவாரமாக இருப்பது நமது ஏடு தொடக்கும் நிகழ்வாகும்.
பிள்ளைகள் சிறந்த கல்வியினைப் பெற்று சிறந்த பாக்கியசாலிகளாக வளர்ந்து பெற்றோருக்கும் இந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
எல்லா பெற்றோர்களும் தமது பிள்ளைகள் கல்வியிலே சிறந்த நிலையினை அடைய வேண்டும் என்று கனவு காண்கின்றார்கள். அவர்களுடைய கனவினை பிள்ளைகள் சரிவர உணர்ந்து நன்றாக கல்வி கற்க வேண்டும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளிற்கு வெறும் கல்வி கொடுக்கின்றவர்களாக மட்டும் இருக்காமல் நல்ல பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.ஆன்மீக சிந்தனையுடன் அவர்களை வளர்க்க வேண்டும்.
எமது மண்ணிலே தற்பொழுது அன்பு, இரக்கம்,கருணை மற்றும் சேவை செய்யும் மனதிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்தகைய சிறந்த நற்குணங்கள் பிள்ளைகளிடம் அரிகிப் போவதற்கு காரணம் பிள்ளைகளை ஆன்மீக ரீதியிலே வளர்ப்பதில்லை என்பதே ஆகும்.
அவர்களிற்கு நல்ல ஆன்மீக பாதையினை சிறு வயது தொடக்கம் பெற்றோர்கள் ஊட்ட தொடங்கினால் பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர்வார்கள் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.
பொற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆலயங்களிற்கு அழைத்து செல்ல வேண்டும் அறக் கதைகளையும் ஆன்மீக கதைகளை பிள்ளைகளிற்கு நாளும் பொழுதும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற உண்மையினை பிள்ளைகளிற்கு கதைகளாக சிறு வயது தொடக்கம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இந்த உலகம் உய்ய வேண்டும் என்றால் நல்ல தெளிவுடைய கல்வி மிக அவசியமாகும் அந்த கல்வியினை பிள்ளைகள் சிறு வயது தொடக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஔவையின் சிந்தனையினையும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் என்னவென்றால் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
இரும்பையும் தேய்த்து அறுக்கக்கூடும் அரம் போன்ற கூர்மையான அறிவு படைத்தவராக இருப்பினும் (அதாவது எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வு காணும் கூர்மையான புத்தி உள்ளவராக இருப்பினும்) அவருக்கு மக்களுடன் இணங்கும் பண்பு இயல்பாக இல்லையென்றால் அவர் ஒரு மரம் (மரக்கலம்) போன்றவராவர்.
அதாவது நல்ல மக்களுடைய பண்பு இருப்பது மனித வாழ்வில் மிக அவசியமான ஒன்றாகும் அந்தகைய பண்பு இல்லாவிட்டால் கல்வி கற்று எந்தப் பயனும் கிடையாது. எனவே கல்வியுடன் நல்ல அறத்தினைப் பின்பற்றுகின்ற பிள்ளைகளாக உங்கள் பிள்ளைகளை பொற்றோர்கள் வளர்க்க வேண்டும்.
எனவே விஜயதசமி என்ற இந்த நாள் மிகுவம் மகத்துவம் மிக்க நாள். அம்பாள் உலகிவே தீமையினைப் பொசுக்கி நன்மையினை தந்த நாள். இந்த நாளிலே உங்கள் பிள்ளைகளை ஆடல் பாடல், தேடல், அபிநயங்கள், கலைகள் என அனைத்தையும் தேடிக் கற்க உங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும்.
எங்கள் சமுதாயம் சீரும் சிறப்போடும் வாழ்வதற்கும் இந்த மண்ணிலே நல்ல அறிவுடைய ஒழுக்கமுடைய மக்கள் இருப்பதற்கு உங்கள் பிள்ளைகளை தர்மத்தின் வழியிவே வளர்த்தெடுங்கள் என்று சகல பெற்றேறார்களையும் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த நல்ல நாளிலே சகல உயிர்களிற்கும் தெல்லிப்பளை அம்பாளின் அருள் கிடைக்க மனதார வேண்டிக் கொள்கின்றேன்.
நன்றி
கலாநிதி.ஆறு.திருமுருகன்,
தவைலர்,
துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பளை.