மயிலத்த மடு விவகாரம் உடனடியாக தீர்வினை வழங்க ஜனாதிபதி பணிப்பு!
![மயிலத்த மடு விவகாரம் உடனடியாக தீர்வினை வழங்க ஜனாதிபதி பணிப்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/10/IMG_20231015_192057.jpg)
மயிலத்த மடு விவகாரம் உடனடியாக தீர்வினை வழங்க ஜனாதிபதி பணிப்பு!
மயிலத்த மடுவில் மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பிரச்சினை தொடர்பில் இன்று(15) ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி செயலாளர், ஆளுங்கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறைமா அதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு என்பன இந்த நாட்டின் முதுகெலும்பாகும் என்பதுடன்,இவை இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து மட்டக்களப்பு மயிலத்தமடுவில் விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களிலேயே விவசாயம் மேற்கொள்ள மாற்று இட ஒதுக்கீடுகள் வழங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இவ்வாறு மாற்று இடங்கள் வழங்குவதன் ஊடாக பண்ணையாளர்கள், விவசாயிகள் என இருத்தரப்பினரின் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை கால்நடைகளுக்கு உணவுகளை வழங்க தேவையான உதவி தொகைகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மயிலத்தமடு – மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த
சில மாதங்களாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.