கைதியிடம் போதைப் பொருளை வழங்கி விட்டு தப்பிச் சென்ற சிறை கண்காணிப்பாளரை தேடும் பொலிஸார்!!
கைதியிடம் போதைப் பொருளை வழங்கி விட்டு தப்பிச் சென்ற சிறை கண்காணிப்பாளரை தேடும் பொலிஸார்!!
சந்தேக நபரான சிறைச்சாலை கண்காணிப்பாளர், ஏதோ ஒன்றை இரகசியமான முறையில் கைதியிடம் வழங்குவதை கடமையில் இருந்த சிறைச்சாலை காவலர் ஒருவர் அவதானித்துள்ளார்.
கைதி ஒருவரிடம் 50 கிராம் போதைப் பொருளை வழங்கி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் களுத்துறை சிறைச்சாலை கண்காணிப்பாளரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவருக்கு சந்தேக நபரான சிறைச்சாலை கண்காணிப்பாளர், ஏதோ ஒன்றை இரகசியமான முறையில் வழங்குவதை கடமையில் இருந்த சிறைச்சாலை காவலர் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து கைதியை பரிசோதித்த போது, அவரிடம் போதை வஸ்து ஒன்று இருந்துள்ளதுடன் அது என்ன போதைப் பொருள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
கைதியிடம் இருந்து போதைப் பொருளை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியதை அறிந்துக்கொண்ட சிறைச்சாலை கண்காணிப்பாளர், நீதிமன்ற கடமை ஒன்று இருப்பதாக கூறி, திடீரென சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் இதற்கு முன்னர் சிறைச்சாலைக்குள் போதைப் பொருளை கொண்டு சென்று கைதிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான சிறைச்சாலை கண்காணிப்பாளர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் கூறியுள்ளனர்.