ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசு மக்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை -புத்தூர் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்
![ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசு மக்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை -புத்தூர் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்](https://likedtamil.lk/wp-content/uploads/2023/03/FB_IMG_1679122551342.jpg)
ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசு மக்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை -புத்தூர் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்
ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாத்துக் கொண்டு மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றி அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பப் போகின்றது என்று கூறுவது கனவிலும் நடைபெறாதது ஒன்று என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு (18) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்ற அரசுக்கு எதிரான உழைக்கும் மக்களின் தீப்பந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டுமானால் முதலில் இனவாதத்தை துடைத்தெறிந்து மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந் நாட்டில் இனவாதம் இன்றும் அரச கொள்கையாக உள்ளது. ஊழல்கள் புரிந்த அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். உழைப்பாளிகள் வரிக்கொள்கை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பினால் சுரண்டப்படுகின்றனர். மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதவாறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.
நடைபெற வேண்டிய உள்ளூராட்சித் தேர்தல்களை அரசாங்கம் தனக்குச் சாதகமற்றது என்பதை உணர்ந்து தடை போட்டுள்ளது. மக்களின் கருத்துச் சுதந்திரம் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும் நசுக்கப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு எதிராக யாழ். புத்தூரில் உழைக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தை நடத்துகின்றனர்.
இப் போராட்டத்தை ஏற்பாடு செய்த உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகச் செயற்படும் அரசியல் செயற்பாட்டாளர்களான செந்தில்வேலர் மற்றும் கதிர்காமநாதன் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கே ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, இப் போராட்டம் என்பது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் சார்ந்த போராட்டமாகும். இதில் சகல தரப்புகளும் இணைய வேண்டும். இப் போராட்டங்களை அரசினால் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. நாடளாவிய ரீதியில் முற்போக்குச் சிந்தனையுடன் போராடும் தரப்புகள் எமது தமிழ் மக்களின் அரசியல் விடுதலை பற்றி வெகுவாகச் சிந்தித்து இனவாதத்தைத் துடைத்தெறிந்து ஒட்டுமொத்த விடுதலையையும் வென்றெடுக்க கடமைப்பட்டுள்ளனர். அதிகரித்த உணவுப் பொருள் விலை உயர்வினால் எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் ஜனாதிபதி தனது இருப்பு தொடர்பில் சிந்திப்பதை விடுத்து மக்களின் பிரச்சினை பற்றிச் செயற்படவேண்டும் என வலியுறுத்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.