பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் 2 சிறுமி பாலியல் வன்புணர்வு பொலிஸ் உத்தியோகத்தர்கைது
![பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் 2 சிறுமி பாலியல் வன்புணர்வு பொலிஸ் உத்தியோகத்தர்கைது](https://likedtamil.lk/wp-content/uploads/2023/01/பொலிஸ்-அதிகாரி-கைது.jpg)
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பளைப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பொலிசாரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுதுரை நேற்று புதன்கிழமை(04) உத்தரவிட்டார்.
கடந்த 27 ஆம் திகதி அன்று பாடசாலைக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வராததைத் தொடர்ந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது தன்னை சிலர் கடத்தி வைத்திருப்பதாகவும் தன்னைக் காப்பாற்றுமாறும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மாணவியின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் அன்று இரவு மாணவியின் வீட்டுக்கு முன்பாக மயக்கம் உற்றிருந்த மாணவியை ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் வைத்தியசாலையில் வைத்து மாணவியிடம் பெற்ற வாக்குமூலத்திற்கு அமையவும், தாயாரின் முறைப்பாட்டிற்கும் அமைய சந்தேக நபரான பொலிசாரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(03) கைது செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை(04) பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அச்சமயம் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இச் சம்பவத்திற்கு அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் இது பொய் குற்றச்சாட்டு எனவும் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொலிஸ் தரப்பு இன்னும் ஒருவர் இச்சம்பத்துடன் கைது செய்யப்பட வேண்டி இருப்பதாகவும் சந்தேக நபரை பிணையில் விடுவித்தால் அவர் மூலம் கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை சிதைந்து போகாமல் இருப்பதற்கு அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் எனவும் தொலைபேசி விவரங்கள் பெறப்பட வேண்டும் எனவும் மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை விளக்க மறியலில் வைக்குமாறு பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.