செம்மணிப் புதைகுழி தொடர்பில் அநுர அரசு வழங்கியுள்ள உறுதி

யாழ்ப்பாணம், செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னர் உண்மைகள் வெளிவரும்.
இது பாரிய மனிதப் புதைகுழி என்று எம்மால் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் இது தொடர்பில் அறிக்கைகள் சமர்பிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணைகளும் இடம்பெறுகின்றன.
எனவே, நீதிமன்றம் தான் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அரசு தொடர்ந்து நிதி வழங்கும். இந்தப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளார்.