கோர விபத்தில் சிக்கிய தம்பதி ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்

நிலாவெளி பகுதியில் நேற்று பகல் இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரியாயிலிருந்து திருகோணமலை நோக்கி மூன்று பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி நிலாவெளியில் வைத்து விபத்துக்குள்ளானதில் திரியாய் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலைக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி கவிழ்ந்ததாகவும் பின்னர் அவ்வீதியின் ஊடாக எதிர்த் திசையில் வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியை செலுத்திய நபர் பொலிஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.