கஹவத்தை துப்பாக்கிச் சூடு ; பிரதான துப்பாக்கிதாரி உட்பட இருவர் நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டனர்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரத்தினபுரி, கஹவத்தை, யாயின்ன பகுதிக்கு கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு 09.00 மணியளவில் சென்ற இனந்தெரியாத நால்வர், இளைஞர்கள் இருவரை ஜீப் வாகனத்தில் கொஸ்கெல்ல பிரதேசத்திற்கு கடத்திச் சென்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 8 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்கள் பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 9 மற்றும் 10 ஆவது சந்தேக நபர்கள் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் கிரிபத்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவரும் இரத்தினபுரியைச் சேர்ந்த மற்றைய சந்தேக நபருமே அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.