அதிபர் – ஆசிரியர் பிரச்சினை: மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை பெற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் (01) முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், அதிபர், ஆசிரியர்களிடையே பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு கடந்த சில மாதங்களாக பாதிப்படைந்துள்ளதாகவும், இதனை சம்பந்தப்பட்ட கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்களால் இப்பிரச்சினைக்கு குறிப்பிட்ட காலத்தில் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளளனர்.
இதேவேளை கணித பாடத்திற்கான ஆசிரியரை பதில் ஆசிரியர் இல்லாது இடமாற்றம் செய்துள்ளதால் மாணவர்கள் கணித பாட செயற்பாடுகளில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், வருகை தந்து பிரச்சினைகளை ஆராய்ந்ததுடன், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்திற்கு சென்று வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.